This entry is in the series 20100725_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



வீழ்கின்ற நாள்வரை
வியர்வை தா
பூக்களாய் வார்த்தை தா

நுகராத நாசியை
நோக்காத விழிகளை
நேசிக்கும் ஞானம் தா

பள்ளிக் கூடமாய்
பகைவரைக் காணும்
பக்குவமும் பலமும் தா

பதர்களையும்
பொத்திக் கொள்ளும்
கதிர்களின் இணக்கம் தா

வெள்ளத்தை வெயிலை
சுகிக்கின்ற பொறுமை தா

சப்பிப் போட்டாலும்
மரமாகும் திறனைத் தா

வாழும் நாளெலாம்
உனைத் தொழுகின்ற
உள்ளம் தா

பேச்சறிவு உள்ளவரை
குளராத சொற்கள் தா

இயற்கையாய் விழும்வரை
வலிக்காத பற்கள் தா

உணவுகள் செல்ல
உபாதைகள் கழிய
குடலுக்கு வலிமை தா

மழையாக ஞானம் தா
மலையாக மௌனம் தா

எனக்காக அழுவோரைக்
குளிப்பாட்ட கண்ணீர் தா

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation