This entry is in the series 20060609_Issue

டீன்கபூர்


கண்டு மகிழாத அழகுக்குள்
மனத்தை உசுப்பியது தென்றல்.
படர்ந்த கொடி கருகிய போதுதான்
ஆணிவேரின் பலம் அறிந்தேன்.

லச்சணம் அற்ற உள்ளுணர்வுகள்
மேவி வரும் போதெல்லாம்
சுழலும் குப்பைக் காற்று
கண்களுக்குள் புதைகின்றன.
நேசம் குழுமி ஒரு வடிவத்தைப் படைக்க
நம்மை இழந்து நிற்க வேண்டியதாயிற்று.

பூமிக்குள் உருப்பெறும் பூகம்பங்களுக்கும்
நமக்குள் ஊறாகும் அதிர்வுகளுக்கும்
எங்கே அளவுகோல் என்று
விஞ்ஞானி முழிக்கிறான்.

ஒருவனும் சிரிப்;பதாகத் தெரியவில்லை.
ஒருவனும் அழுவதாகவும்; தெரியவில்லை.
மனசுகளுக்குள் மாபெரிய மலைகள்
புகைக்கின்றன.

ஒரு வெளி அசைவதும்
ஒரு மாயை தெரிவதும்
விழிகளைக் கசக்குகின்றபோது…..
ஒற்றையாய்ச் சுற்றும் பருந்துக்கு
பேட்டினுள் மறையும் குஞ்சு உணவாக.
எதுவும் ஆசை தீர்ப்பதில்லை.
எதிலும் பாசம் மொய்ப்;பதில்லை.

பிசைந்த விரல்களுக்குள் மூளை
பேசுகின்ற போது
நலம் மேலோங்கி இருக்கும்.
இமை உயிருடன் ஆயிரம் பேசும்.
உரோமக் கண்களுக்குள்ளும்
வறண்டிராத பெரு மூச்சு பாய்கிறது.

ஆயிரம் கனவுகளுக்குள்ளும்
ஒரு கனவு மெய்ப்பட
தவங்கிடந்தே காலம் கரைகிறது.
படைத்தவன், எவருக்கும் பாரங்கல்லை
தலையில் வைப்பதில்லை.
மண்டைத் சுவட்டில் அவன் மொழி
பேசிக் கொண்டிருப்பதே முடிவு.

ஆயினும்
தூய்மை மனிதனில் படிய வேண்டும்.

டீன்கபூர் – இலங்கை

deengaffoor7@yahoo.com

Series Navigation