This entry is in the series 20040506_Issue

பா. சத்தியமோகன்


வாழ்த்துக்கள் !
இந்த நாட்டின் தேசிய சொத்தைத் திருடினாயே …
கவியரசர் தாகூரை
தேசமே திரும்பிப் பார்த்து உணர வைத்த திருடனே
வாழ்த்துக்கள்!

பறித்துச் செல்லும் வரை
உயிர் உடலில்தான் என்பது
மரணம் வரை புரிவதில்லை.

பெற்றிருந்த தாய்ப்பாசம்
தந்தைப்பாசம் மொழிப்பாசம்
என்பதெல்லாம் இழக்கும் வரை புரிவதில்லை

இப்படித்தான் சுதந்திரத்தை இழந்து விட்டு
ஆங்கிலேயனிடம்
போராடிப் பெறும் வரை
சுதந்திரத்தின் வலி புரிந்திருக்கவில்லை.

ஆயினும் நினைவுகொள்வாய் திருடனே
தாகூரின் பரிசைத்தான் களவாட முடியும்
அவர் தம் கருத்தையல்ல.

கேட்கிறாயா
தாகூர் பாடல்:
‘என் காதலனே
எல்லாருக்கும் பின்னால் நிழலில் மறைந்து கொண்டு
எங்கே நிற்கிறாய் நீ ? ‘

திருடனே…
திருப்பிக் கொடுக்கிறோம் எங்கள் கவி மீதான கவனமின்மையை.
திருப்பி வை – எங்கள் தேசிய பரிசை.

****

Series Navigation