This entry is in the series 20061019_Issue

ஹெச்.ஜி.ரசூல்


குதிரைகள் பதித்த தடங்கள் பல
குளம்படிகளினூடே அழியாது தெரிந்த வேகம்
பாலின அடையாளம்
எதுவென தெரியாத குதிரைகள்

நேற்றைய சவாரிகளில்
மொகலாய மன்னர்களும்
குட்டி இளவரசிகளும் வலம் வந்தார்கள்.
வெற்றிப் பெருமிதங்கள்
அடிக்கடி பேசப்பட்டன.

வரலாற்று குறிப்புகள்
ஒற்றை அடையாளத்தோடு முடிந்து போனது.

படைவீரனுக்காய் காத்து நின்று
வாள்கள் கேடயங்களோடு
களங்களில் வெட்டுப் பட்டன குதிரைகள்

கடிவாளங்களோடும்
நெருப்புச் சாட்டைகளோடும்
அடிமைகளாய் வாழ்ந்தவை

அவற்றின் குரூர மரணம் குறித்து
எந்த மகாகவியும் எழுதவில்லை.

Series Navigation