This entry is in the series 20031120_Issue

சத்தி சக்திதாசன்


விழியா அது ?
கண்மணியே என்னைக்
கட்டி இழுக்கும்
காந்தமல்லவோ அது

அது என்ன உன் வதனமா ?
நிலவுகள் இரண்டு ஒரே இரவினில்
எப்படி என்று
புத்தகங்களைப் புரட்டியபடி நான்

ஓ! அது உன் இடையா ?
முல்லைக் கொடியோ என்று
ஒடிந்து விடாது முட்டுக் கொடுக்க
கம்பெடுத்து ஓடி வந்தேன்

நடையல்ல அது காதலியே
தெப்பக்குளம் ஒன்றும் அருகில்லாதிருக்க
அன்னமொன்று
எப்படி இங்கே என்று நான்

சிரிப்பல்லடி அது
அதேபோன்ற முல்லைச்சரத்தைத்
தேடி இங்கே ஆயிரம்
பூக்கூடைக்காரிகளிடம்
வசைமாரி வாங்கி விட்டேன்

லாட்டரி விழுந்ததாம் எனக்கு
நண்பன் கூறியதும் சிரித்தேன் நான்
லட்சம் லட்சமாய்க் கொட்டினாலும்
காதலி உனைப்போன்ற செல்வம்
இவ்வுலகில் ஏதுமுண்டா ?
—————————————–
sathnel.sakthithasan@bt.com

Series Navigation