This entry is in the series 20090212_Issue

ஹெச்.ஜி.ரசூல்



1
சகாபி வகாபி சண்டையில்லை
சுன்னி ஷியா மோதலில்லை
பாபர்மசூதி அயோத்தி கலவரமில்லை
குரான் பைபிள் விவாதமில்லை
தொட்டில் குழந்தையின்
நிச்சலனமற்ற மெளனம்
அதிகாலைதோறும்
என்னை வீழ்த்திவிடும் தூக்கத்திற்கு
நன்றி சொல்கிறேன்.
தொழுகையைவிட தூக்கம் மேலானது.
எச்சி வாயோடு எழுதிக் கொண்டிருப்பதாய்
என் சின்னமகள் விமர்சிக்கிறாள்
2)
நான் எழுதிய கவிதையை
உனது கவிதை என்றறியாமல்
நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்.
எனது கவிதையும்
உனது கவிதையும் வெவ்வேறானது.
ஒரே நாளில் நான் எழுதி முடித்த
முப்பத்தைந்து கவிதைகளையும்
அந்த இருள் கவ்விய இரவில்
தீ வைத்துக் கொளுத்திவிட்டேன்.
கவிதையைவிட
வெளிச்சம் முக்கியமானதென்று
மனைவி கூறுகிறாள்.

Series Navigation