This entry is in the series 20090512_Issue

ஸ்ரீபன்


எரிகிறது எங்களின் வீடு
ஆனால் நீங்களோ
குருதி தோய்ந்த வன்மத்தோடும்
பைத்தியக்காரனின் சிரிப்போடும்
கும்மாளமிடுகிறீர்கள்

எரிப்பவனை விட்டுவிட்டு
எரிவதற்கான காரணத்தைதேடி
காலத்தின்மீது எம்மவர் விட்டுச்சென்ற
காலடித்தடங்கள் மீது
பூதக்கண்ணாடி கொண்டு அலைகிறீர்கள்


நெருப்பை முதலில் அணைத்துவிட்டு
பிறகு காரணம்தேடலாம் என்றபோது
புகைமண்டலத்துக்குப்பின்னால் நீங்கள்
ஓழிpந்துகொண்டிருக்கிறீர்கள்

மறந்துவிட்டதாக நினைத்த உங்களின் கடந்தகாலம்
நடு இரவில் விழித்துக்கொண்டு
உங்களையே உற்றுப்பார்க்கிறது

நடு இரவில் யாருக்கும் தெரியாமல்
உங்களின் கண்களிலிருந்து விழும்
கண்ணீர்த்துளியை துடைத்துக்கொள்வது
உங்கள் மனச்சாட்சிக்கு மட்டுமே கேட்கும்

வீதிகள் கடந்து நகரங்களெல்லாம் கேட்கும்
எங்களின் கூக்குரலை தொடர்;ந்து நீங்கள் வரும்போது
அது பைத்தியக்காரரின் கூடாரமாகத் தோன்றலாம்
உங்களுக்கு

நீங்கள் கேட்கவிரும்பாத பாடலொன்று
அங்கே ஒலித்துக்கொண்டே இருக்கிறது


ஸ்ரீபன்

Series Navigation