This entry is in the series 20100815_Issue

ஹெச்.ஜி.ரசூல்


மரணம் நிகழ்வதன் வேதனையை
என்னால் உணரமுடிகிறது
திடீரென வ்ரும் மாரடைப்பாகவோ
நீண்டநாள் படுக்கையில் புதைந்து
இறுதியில்வரும் இறப்பாகவோ
குண்டுவெடிப்பின் இடுக்குகளில்
ரத்தம் புரள சதைகிழிந்தோ
எப்படியேனும் நிகழலாம்.
தவழ்ந்து நடந்து வாழ்ந்த
வீட்டின் திண்ணையிலோ
பெற்றெடுத்த பிள்ளைகள்
சூழ்ந்தோ சூழாமலோ
கண்ணீர் ஒன்றின் அடையாளத்தோடு.
ஒருவேளை அந்த சம்பவத்தில்
முகம்தெரியாதவர்கள் கூட
வருத்தபாவனையுடன் பார்க்க.
மரணத்திற்குப் பிறகு
நான் வாழ்ந்த இடம்
காற்றில் நிரம்பிய பேச்சு
எல்லாமே வெற்றிடம்தான்.
நானற்ற இன்னொன்று
நிரப்புவதற்கில்லை அதை

Series Navigation