This entry is in the series 20070531_Issue

ஹெச்.ஜி.ரசூல்


என் உலகம் வேறாய் இருந்தது
எறும்பாய் ஊர்ந்த போதும்
மின்வெட்டாம் பூச்சியாய்
இருளில் நீந்திய போதும்
வசப்படாத வெவ்வேறு திகில்களோடு
மாயங்களில் சுழன்றெழுந்தது
ஒரு மந்திரக்கோல்
பிறப்புறுப்பில் பூத்திருந்தது
சின்னஞ்சிறு பூ
அத்துமீறல் செய்து
கடல் பிளந்து நடக்கவும்
பனைமரத்தின்
இழந்த கொண்டைக்கு தலையாய் மாறவும்
எத்தனித்த போது
எதிரே வந்தாய்
வேரும் வேரடி மண்ணோடும்
பில்லி சூனியம் வைத்தென்னை அழிக்க
ஒரு குத்து
புளியம் இலைகளை பறித்தெடுத்து வீசினேன்
விஷக் கொடுக்குகள் முளைத்த
கடந்தைகள் சீறிப் பாய்ந்தன உன்மீது.
2)
பனைமரங்கள் எரியும் காடு
மரம் பிளந்து தோற்றம் தரும் உன்னுருவம்
உருவற்று காற்றில் அலையும்
பயங்கரங்களை கொல்லும்
விதியொன்றை எழுதி.

Series Navigation