This entry is in the series 20070524_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1)
ஒரே உதையில் தூரப் போய்விழுந்த
பொம்மை சொன்னது
இப்படி எல்லாம் நடந்திருக்காது
எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால்
2)
மூடிய கைகளைத் திறந்து
குட்டி பொம்மையை பறத்திவிடுகிறேன்
வனமெங்கும் பறந்து திரிந்து
உள்ளங்கைகளில் திரும்பவும் வந்து
அது உட்கார்ந்து கொள்கிறது.

எல்லோரும் பெயர் சொல்லி அழைக்கும் போது
என்ன பெயர் சொல்லி உன்னை அழைக்க

தந்தைதாய் பெயரறியாத
அந்த குட்டி பொம்மைககு
ஒரு பெயர் சூட்டினேன்.
எப்போதும் போல்
அது ஒரு குழந்தையாக சிரிக்கிறது.

3)
நீயற்ற பிரபஞ்சம் எதுவுமில்லை
பிரபஞ்சமே நீயெனச் சொல்லியது காற்று.
சிந்திக் கிடக்கும் முத்தங்களை
ஒவ்வொன்றாய் பொறுக்கியவாறு
கைநிறைய பரிசுப் பொருள்களோடு
வரவேற்றது எதிரே ஒரு கவிதை.
4)
வார்த்தை பேச்சு எழுத்து
எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத
பெருந் துயரம் பேரலையாகி
கடலை மூழ்கடிக்கிறது.
ஆறுதல் கொள்ள உன் பெயரை
திரும்பவும் உச்சரித்துக் கொள்கிறேன்
ஒரு இறகாய் மிதந்து.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation