This entry is in the series 20110123_Issue

குமரி எஸ். நீலகண்டன்


அவனுக்கும்
எனக்குமாய் இருந்த
அழகான இனிய
கோப்பை அது.

ஒளித் தடையில்லாத
தெள்ளந் தெளிந்த
பளிச்செனப் பளபளக்கும்
பகட்டானக் கோப்பை அது.

எங்கள் அன்பைக் கரைத்த
அதி உன்னத பானத்துடன்
நுரை பொங்கி நிறைந்த
கோப்பை அது.

ஊடுருவி உரையாடிக்
கொண்டிருக்கும்
எங்கள் உள்ளங்களின்
ஒளி பெருக்கியாய்
அந்த கண்ணாடிக் கோப்பை..

நான் என் நண்பனிடம்
ஒன்றைச் சொல்லப்
போகிறேன்.. அப்போது
அந்த கோப்பை
என் நண்பனின் கைகளின்
பிடி விலகலால்
உடைக்கப் படலாம்.

உடையக் கூடாதென
அந்த கோப்பைக்காக
உருகிக் கொண்டிருக்கும்
எனக்கு நான்
சொல்ல வேண்டியதை
சொல்லாமலும் முடியாது.

Series Navigation