This entry is in the series 20100711_Issue

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ


அறுந்து விழும் நூட்களாய்
அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும்
மழைக்கு முந்தைய தூறல்கள்
ஆனால் மனதின் மையப் பகுதியில்
பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும்
ஒரு பெரு மகிழ்ச்சி மழை
விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்
மழைக் காலத்திய மண் வாசனைகள்
கருந்துணியிட்டு மறைத்தாற் போல்
மங்கிய மாலைப் பொழுது
இன்னும் மழை தொடராதாவென்ற
மனம் படர்ந்த ஏக்கத்தில்
ஜன்னலுக்கப்பால் நீண்ட கரங்கள்
குளம் கட்டிய மழை நீரில்
கால் தூக்கிய நடை
அவ்வப்போது உடல் வெடவடத்துச் செல்லும்
காற்றில் கலந்த மிச்சச் சாரல்கள்
மறு நாளைய வெயிலாக்கிரமிப்பு வரை
மனதை விட்டகலாது
மழை நேரத்திய மகிழ்ச்சி
ஓங்கி வலுத்துச் சூழ்ந்த சூளைச் சுவர்களில்
உரத்துக் களைத்த சின்னத்திரைகளில்
விடுபட்டுப் போன மழை நேரத்திய மகிழ்ச்சிக்காக
கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு
மறு நாள் ஜன்னல் திறக்கையில்

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>