திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

யாழன் ஆதி கவிதைகள்

This entry is in the series 20060317_Issue

யாழன் ஆதி


இதைத்தான் சொல வேண்டுமா
நீ நிறைத்த குடத்தின்
கனவுகளையும் சேர்த்து

எந்த வழிதலிலும் நீயற்ற
மர்மம் தொடர்கிறது

ஒரு வழக்கமான இசைத்தெரித்தலாய்
இருந்தால்கூட
நீ காய்ச்சிய பாலின் ஆடைகளிலிருந்தே
ஆரம்பம் ஆகிறது

மரவமர்வின் முடிவில்
பறந்தோடும் பறவையின்
எச்சத்தில் மிச்சமிருப்பதென்ன
என்னைத் தவிர.


கானல் வரிகள்

வறண்ட காற்றில்
உதிர்ந்து கொண்டிருந்தன சருகுகள்

தகிப்பின் சூடு தாங்காமல்
பொரிந்தன முட்டைகள்
இலைகளற்ற
மரக்கிளைக் கூடுகளில்

அளவுகடந்த துன்பத்தின் அலைகள்
சூழ்ந்து படர்ந்துத் திரண்ட
வெறுமையெங்கும் விளைந்திருந்தது
அனாதியின் ஓங்காரம்

சுருண்டு விழுந்த புறாவின்
இறக்கைகளில்
சூழ்ந்து இருந்தது வாழ்வு பற்றிய விவரணம்.
***

ஓர் ஏகாந்தமாய் தவிக்கும்
எப்பொழுதிலும்
பசப்புத லில்லா வருகையாய்
இருந்திருக்கிறது தனிமை

உன் நினைவுகள் சுழற்றியடிக்கும்
காற்றில்
கேசமாய் கலைவேன்
கடிகாரத்தின் முட்களாகி
நகர்ந்துக் கொண்டிருக்கும் அவை.
***

திடாரென கேட்கும் பறவையின் ஒலியிலோ
கிணற்றடி குட சப்தத்திலோ
கரைந்து மீள்வாய் நீ

yazhanaathi@gmail.com

Series Navigation

About யாழன் ஆதி

யாழன் ஆதி

View all 5 articles →

யாழன் ஆதி கவிதைகள்

This entry is in the series 20040226_Issue

யாழன் ஆதி


====

0
பிரார்த்தனை நேரங்களில்
தரிசிக்கிறேன்
உன்னை.

0
உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
பறவைகளாகி உயரப்
பறக்கின்றன என்னிலிருந்து
முற்றும் அற்றுப் போய்விடுமோ
என் கூடென்று
ஓடுடைத்து வெளி வருகின்றன
இன்னும் பறவைகள்.

0
ஓர் ஏரியின் கரையில்
நின்று
நீர்ச்சலனத்தை வரைகிறேன்
எதிலும் பெறமுடியாத
இசையின் வசீகரிப்பில்
கொஞ்சம்
கொஞ்சமாய்
தெளிகிறது உன் முகம்.

0
அவைகளின் எத்தனிப்பில்
சிதைந்து முடிகின்றன
நம் காதலுக்கான சொல்லாடல்கள்
சொற்களுக்கு அப்பாற்பட்ட
ஒன்றினை
தேடிக்கொண்டிருக்கிறேன்
தூரப் பறக்கும்
அந்த பறவையின் சிறகில்.

0
எல்லாவிதமான ஓசைகளிலிருந்தும்
பிரித்தறிகிறேன் உன்னை
மழை
குயில்
காற்று
சப்தம் எழுப்பும் எவையும்
தோற்றே போகின்றன
அழகிய உன் ஒலி முன்

சாரல் வாய்க்காத என் மேனியெங்கும்
முளைத்திருக்கின்றன செவிகள்
உன் ஒலியதிர்வுகளுக்காய்

ஒரு நிர்ணயப் பொழுதில்
அவிழத் தொடங்கும் மேகங்களை
அல்லது மொட்டுகளை
அறிமுகப்படுத்துவேன் உனக்கு.

0
இடைவெளிகளின்
ஆழத்தைப் பெயர்க்க முடியாத
என் கைகளுக்கும்
நழுவிப்போய் தவறும்
உன் இருப்புக்கும்
எதனாலோ
தெரிகிறது
நாம் மூடிவைத்திருக்கிற
காதலின் வாசனை.

0

அனுப்பி உதவியவர் -ruminagore@yahoo.com-

Series Navigation

About யாழன் ஆதி

யாழன் ஆதி

View all 5 articles →