This entry is in the series 20100718_Issue

குமரி எஸ். நீலகண்டன்


நீ பார்க்கும் என் முகம்
என்னுடையது அல்ல.
நீ நேற்று பார்த்த
என் முகமும்
என்னுடையது அல்ல.

நீ பார்த்த
அந்த முகம்
என்னுள் நீ உருவாக்கிய
உன்னுடைய முகம்.

சிரித்தாய் சிரித்தேன்.
அழுதாய் அழுதேன்.
கோபப் பட்டாய்
நானும் கோபப் பட்டேன்

நான் உன்னிடம்
பேசிய வார்த்தைகள்
என்னுள் உன் முகம்
உன்னிடமே பேசியவை.

எங்கோ இருக்கும்
என் முகம்
உனக்குத் தெரிவதில்லை.

எனக்கும் ஒரு சிலருக்குமே
பார்க்க இயன்ற
என் முகத்தை
உனக்குப் பார்க்க
வேண்டுமா?
முதலில்
உன் முகத்தைக்
கண்ணாடியில் பார்.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigation