This entry is in the series 20090423_Issue

ரஜித்



சிராங்கூன் விதையொன்று
சிகாகோவில் செடியாம் – இதில்
செடியின் குற்றமென்ன?

அரித்த மண்ணுக்கு
நின்ற இடம் சொந்தம் – இதில்
மண்ணின் குற்றமென்ன?

உறைக் குத்தியபின்
பாலுக்கப் பெயர் பாலல்ல ௲ இதில்
பாலின் குற்றமென்ன?

கதம்பத்தில் தைத்தபின்
மருக்கொழுந்தும் கதம்பம்தான் – இதில்
கொழுந்தின் குற்றமென்ன?

குயிலின் முட்டைக்கும்
காகம்தான் தாயாம் – -இதில்
குயிலின் குற்றமென்ன?

அறியும் வயதில் தமிழ்
அறிமுகமே யில்லை ௲ இதில்
தமிழரின் குற்றமென்ன?

தமிழைத் தத்தெடுத்த சிங்கை
தமிழரைக் கேட்கிறது
‘தமிழில் பேசு’

‘முடியாது’ வழக்கிலிருக்கட்டும்
வாழ்க்கையில் வேண்டாம்

எழுபதுமுறை வழுக்கித்தான்
எவரெஸ்டைத் தொட்டொம்

பல்பைச் சொன்ன எடிசனுக்கு
பல்லாயிரம் தோல்விகள்

அறுபது தோல்விகள்
அறுகா வேள்விகள்
வாகனமோட்டு தேர்வில்
மூத்த மூதாட்டி

வேர் காய்ந்தாலும்
காற்றின் ஈரத்தைக்
கறந்துவிடுவான் தமிழன்

இன்று காற்றெல்லாம் தமிழ்தான்
அன்று கைவிட்ட தமிழை
இன்று கற்றுவிடுவோம் வா


Series Navigation