This entry is in the series 20090226_Issue

ரஜித்


‘ஸ்லம்டாக் மில்லியனர்’
மும்பைச் சேரியில்
ஈசலொன்று
மயிலான கதை
கதையின் உயிர் இசை
இசையின் உயிர்?
நீ நீ நீ நீ நீ . . .

கப்பல்கள் பல
தோற்றுத் திரும்பிய
ஆஸ்கார் கடலை
கட்டுமரத்தால்
கடந்திருக்கிறாய்

மும்பைச் சேரிகளை
தேன்மழையில்
நனைத்திருக்கிறாய்
தீமழையில்
எரித்திருக்கிறாய்

சொட்டு வியர்வையும்
சொட்டு மழையும்
இடித்துக்கொள்வதை
இசைத்திருக்கிறாய்

உன் இசையில்
மௌனம் இரைகிறது
இருதயம் உரைகிறது

அன்றுரோஜாவில்
நீ பனிக்கட்டி
இன்று நீ ஜீவநதி
ஜெய் ஹோ. . .
ஜெய் ஹோ. . .
உலகமே உன்னால்
ஈரமாகியிருக்கிறது

இன்று
ஒரு தமிழனை மையமாக்கி
இசையுலகமே
சுழல்கிறது

தாய்க்கு
விருதைத் தந்தாய்
இறைவனுக்குப்
புகழைத் தந்தாய்
அதை நீ
தமிழில் தந்தாய்

தமிழை ஏற்றிவிட்டு
நீ இறங்கிக் கொண்டாய்

அய்யாயிரம் ஆண்டுகள்
தமிழன் தொழுத தமிழ்
இன்று உன்னைத்
தொழுகிறது


Series Navigation