This entry is in the series 20030104_Issue

ஜடாயு


கடல் தாண்டும் கால்கள்
கதிவரனைப் பிடிக்க நீளும்
கைகள்
அரக்கப் பதர்களைப்
பொசுக்கி அழிக்கும்
அக்கினிப் பார்வை

இரும்பினால் உடல்
எஃகு நரம்புகள்
இடியை உண்டாக்கும்
இதயம் அதனுள்

‘எடுத்த காரியம்
முடித்தே தீருவேன்
என்னவாயினும் ‘ எனும்
இலட்சிய தாகம்

இன்னிசை பொழியும்
எழில்மிகு திருவாய்
தன் நிலை உணர்ந்த
தத்துவ தரிசனம்

ஐம்புலன்களின்
அவாக்கள் அனைத்தையும்
ஆமை போல் அடக்கிய
ஆன்ம யோகம்

உள்முக ஆற்றல்
ஒருமுகப் பட்டு
உன்னதம் எய்திய
ஒழுக்க சீலம்

தளர்வு தகர்க்கும்
சோம்பல் துடைக்கும்
மயக்கம் அறுத்து
மனம் தெளிவிக்கும்
மாண்பு பெருக்கும்
மாருதி மந்திரம்

அச்சம் தவிர்
அச்சம் தவிர் என
அறைந்து முழங்கும்
அனுமன் வேதம்

(c) ஜடாயு (jataayu@hotmailcom)

Series Navigation